Saturday, November 28, 2009

பழமொழிகள் ஜாக்கிரதை


கூழானாலும் குளித்துக் குடி...
குளித்து முடித்திருக்கிறேன்...
பொருமியது பசித்தவன் வயிறு!

கந்தையானாலும் கசக்கிக் கட்டு...
கசக்கிக் கசக்கியே கந்தையானால்?
சினத்துடன் சலவைத் தொழிலாளி!

ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாதாம்...
சிரித்துக் கொண்டேச் சென்றாள்
கூன் விழுந்த கிழவி!

அகத்தின் அழகு
முகத்தில் தெரியுமாம்...
நகைத்து மறைந்தது நிலவு!

காற்றின் வழி


கைகள் படாத புத்தகப் பக்கங்களின்
கன்னித் தன்மையைக்
கவர்ந்து செல்கிறது காற்று

குழந்தை மனம்


மெல்லிய சோகம் இழையோடும்
நீண்ட தூர இரயில் பயணத்தில்
ஜன்னல்களுக்கு வெளியே கைகளை ஆட்டி மகிழும்
குழந்தைகளின் சிரிப்பில்
ஜில்லென்றானது மனம்.

Friday, October 9, 2009

முத்தத்தின் கண்ணீர் துளி



உன் கைக்குட்டை நனைந்திருப்பது - நீ
ஒற்றியெடுத்த உனது உதட்டு வியர்வையினால் அல்ல
அதில் கரைந்திருந்த எனது
முத்தத்தின் கண்ணீர் துளியால்

Saturday, September 5, 2009

நிஜம்


துளையிடுதல் சுலபம்
வசிக்க முடியுமா வாழையில்?
மயக்கத்தில் மரங்கொத்தி !

Tuesday, August 11, 2009

நிகழாத்தகவு!



ஜனிக்கும் போது மௌனிக்கிறாய்
மரிக்கும் போது சந்தோஷிகிறாய்
எனது விரும்புதலும்
உனது பிரதிபலிப்பும்
எதிர்மாறோ?

Saturday, August 8, 2009

மலரினும்



சுகந்தம் பரப்பிக்கொண்டே நடக்கும் நீ
எதற்கும் கொஞ்சம் சுற்றமும் பார்த்து நட.,
மலரென்று நினைத்து வண்டுகள்
மகரந்தம் வைத்து விடப் போகின்றன ...

நீயின்றி



எனது அடர்ந்த தனித்த இரவுகளில்
தொடர்ந்து படர்ந்துக் கொண்டிருக்கிறது
உடைந்த வார்த்தைகளால் நிரம்பிய
கவிதைகளுடன் உனது நினைவுகள்

Friday, August 7, 2009

காதல் நிறைந்தவன்


காற்று நிறைந்த பலூனை வைத்து
குழந்தை விளையாடுவதைப் போல
காதல் நிறைந்த என்னை வைத்து
நீ விளையாடுகிறாய் ...

அவளின்றி


அவள் வராத காலம் - என்
வனத்திற்கு இலையுதிர் காலம்.,
மனத்திற்கு கொலையுதிர் காலம்.

எங்கெங்கும்


எனது பேனா காகிதங்களை
முத்தமிடும் போது எழும் சத்தமெல்லாம்
உனது பெயர்தான்...