Saturday, November 28, 2009

பழமொழிகள் ஜாக்கிரதை


கூழானாலும் குளித்துக் குடி...
குளித்து முடித்திருக்கிறேன்...
பொருமியது பசித்தவன் வயிறு!

கந்தையானாலும் கசக்கிக் கட்டு...
கசக்கிக் கசக்கியே கந்தையானால்?
சினத்துடன் சலவைத் தொழிலாளி!

ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாதாம்...
சிரித்துக் கொண்டேச் சென்றாள்
கூன் விழுந்த கிழவி!

அகத்தின் அழகு
முகத்தில் தெரியுமாம்...
நகைத்து மறைந்தது நிலவு!

காற்றின் வழி


கைகள் படாத புத்தகப் பக்கங்களின்
கன்னித் தன்மையைக்
கவர்ந்து செல்கிறது காற்று

குழந்தை மனம்


மெல்லிய சோகம் இழையோடும்
நீண்ட தூர இரயில் பயணத்தில்
ஜன்னல்களுக்கு வெளியே கைகளை ஆட்டி மகிழும்
குழந்தைகளின் சிரிப்பில்
ஜில்லென்றானது மனம்.